நல்லூரும் நாவலரும்

- கலாநிதி க குணராசா -
 


ல்லைநகர்க் கந்தவேளுக்கும் நல்லை ஆறுமுகநாவலருக்கும் இடையில் நெருங்கிய பிணைப்புள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை சிவாகமங்களுக்கும் குமாரதந்திரங்களுக்கும் இணங்க மாற்றியமைக்க வேண்டுமென அவர் விரும்பினார். 'இந் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குத் தூபி இல்லையே? தூபியில்லாதது கோயிலாகாதே! இக்கோயில் ஒரு சிறிதேனும் விதிப்படி கட்டப்பட்டிருக்கவில்லை' என அவர் கூறினார்.

இது மடாலயம் ஆதலாலும் சமாதிக் கோயில் ஆதலாலும் விதிமுறைகளுக்கு இணங்க அமைய வேண்டுமென்ற நியதியில்லை என்பர். ஆதலால், வருடாவருடம் கோயிலினுள் மாற்றங்கள் உருவாகின்றன. வழமையான உள்வீதி, திருக்குளத்தை உள்ளடக்கி இன்று அமைந்துள்ளது. வடபாக உட்புறச் சுவரில் திருமுருகனின் அறுபடை வடிவங்களைக்கீறி, முருகனின் காலில் "ஆமப்பூட்டு" ஒன்றும் மாட்டியிருக்கிறார்கள். நடராசரின் சித்திர வடிவம் கிழக்கு நோக்கி இருக்க, முருகனின் திருக்கலியாணக் கோலம் தெற்கு நோக்கி வரையப்பட்டிருக்கிறது. சூரிய நாராயணின் வடிவம் கிழக்கு நோக்கி வரையப்பட்டுள்ளது. உட்பிரகார மண்டபங்களும் முன்புற புதுத் தோற்றமும் அவற்றிலுள்ள தோரண வளைவுகளும் இந்துக் கோயிலுக்குரிய தாகவில்லை. மடாலயம் ஆதலால், ஆகம விதிகள் இங்கு பூரணமாகப் பேணப்படாது போயின.

'கி.பி. 1873இல் கந்தையா மாப்பணார் அதிகாரியாக இருந்த காலத்தில், ஆறுமுகநாவலர் அவர்கள் அக்கோயிற்றிருப்பணியைக் கருங்கல்லாற் கட்டும் விருப்பினராய், அ?தோடு கோயிலாதீனம் ஊரவர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சபையால் நடத்தப்பட வேண்டுமென்னும் நோக்கமுடையவராய், அவ்வருடம் தை மாசத்தில் அக்கோயிலில் மகாசபை ஒன்று கூட்டிப் பிரசங்கஞ் செய்து ரூபா 6,000 வரையில் கையொப்பமுஞ் சேர்த்தார். ரூபா 3,000 வரையிற் செலவு செய்து கருங்கற்களும் எடுப்பிக்கப்பட்டன. ஆனால் தேர்த்திருவிழவுக்கு முதனாள் செய்து வருகிற ஆட்டுக் கொலையை இனிமேல் அவ்வாறு செய்வதில்லையென்று நாவலருக்கு முன் செய்து கொடுத்த பிரதிக்கினைக்கு மாறாகப் பின்னும் அக்கொலை நடந்தபடியால், நாவலர் அவர்கள் கோபித்து, 1876ம் வருஷம் மார்கழி மாசம் வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலில் ஒரு மகாசபை கூட்டி, நல்லூர்க் கந்தசுவாமி கோயிலதிகாரியை விலக்குவதற்கு ஒரு வழக்குத் தொடரவும், பின் அக்கோயிலை ஒழுங்காய் நடத்துவற்குமாக, ஒரு சபை அக்கூட்டத்தில் நியமிக்கப்பட்டது. நியமிக்கப்பட்ட சபையார் கோயிலதிகாரி மேல் வழக்குத் தொடர்ந்தனர். அது விளக்கத்திற்கு வருமுன் நாவலரவர்கள் தேகவியோகிகமாயினர். 10-06-1929-ல் இக்கோயில் பொதுவென்றும், கோயிலதிகாரி கோர்ட்டுக்குக் கணக்குக் காட்டவேண்டுமென்றுந் தீர்ந்த டிஸ்திரிக் கோர்ட்டுத் தீர்மானம் நாவலர் அவர்கள் தொடங்கிய வழக்கின் பெறுபேறேயாகும்.

'இக்கோயிலுக்குப் பெயர் யாது? கந்தசுவாமி கோயில். இங்கிருக்கிற மூர்த்தி கந்தசுவாமியா? இல்லை, வேலாயுதம். கந்தசுவாமிக்கு வடிவம் வேலாயுதமா? அது அவர் கைப்படிக்கலம். அவரேவல் செய்யும் அடிமை' என நாவலர் கூறினார். தீட்சை பெறாத பிராமணர் பூசை செய்ததும், தேவதாசிகள் நடனமாடுவதும், தேர்த்திருவிழாவின் போது தேர்க்காலில் ஆடு வெட்டிப் பலி கொடுப்பதும் ஆகம விதிகளுக்கு முரணானவை' என அவர் கருதினார். அதனால், அக்காலத்தில் கோயிலதிகாரியாக இருந்த கந்தையா மாப்பணாருடன் பெரும் சச்சரவுப்பட்டுப் பிரிந்தார். ஒரு கட்டத்தில் 'இருபத்தைந்து வருஷகாலம்' நல்லூர்க் கோயிலுக்குப் போகாதிருந்துள்ளார்; கர்ப்பக் கிருகத்தைக் கருங்கற்றூலியாகச் செய்விக்க அவர் விரும்பி, கருங்கற்களும் தருவிக்கப்பட்டன. ஆனால், கோயிலதிகாரிகள் ஒத்துழைக்காததால், அவை வீதியில் வீணே கிடந்து, இன்று வெளி மதிலுக்கு அத்திவாரமாகிவிட்டன.

நாவலருக்கும் மாப்பாணர்களுக்கும் விரோதம் இருந்துள்ளதை நாவலரின் 'நல்லூர்க் கந்தசுவாமி கோயில்' என்ற கட்டுரையிலிருந்து அறிய முடிகிறது.

'எப்படியாயினும் ஆகட்டும். இங்கே அருள் விளக்கம் இருக்கிறது' என்பதை நாவலரும் ஏற்றுக் கொண்டார்.

மூலம்: நல்லை நகர் நூல்

எழுதியவர்: கலாநிதி கந்தையா குணராசா (செங்கை ஆழியான்)

வெளியீடு: பூபாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு

இரண்டாம் பதிப்பு: ஜனவரி 2001

நாவலர் மீண்டும் வரவேண்டும்!

- பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை -
 

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் சிலை உருவில் மணிமண்டபத்தில் வீற்றிருந்த நாவலர் பெருமான் நல்லூர் பற்றித்தாம் முன்னர் கூறிய திருத்தங்களை மீண்டும் அதேயிடத்தில் இருந்து கொண்டே சொல்லிக்கொண்டே இருப்பாரேயானால், நாவலர் பெருமான் கூறிய திருத்தங்கள் காலகதியிலேனும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் மேற்கொள்ளப்படலாம் என்பதே எனது கருத்தாகும். இவ்வாறு நாவலர் மரபின் கொழுந்தாக வாழ்ந்த தவமுனிவர் பண்டிதமணி இலக்கிய கலாநிதி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வீரகேசரி வாரமலரில் எழுதிய கட்டுரையில் லலியுறுத்தியுள்ளார்.

பண்டிதமணி ஐயா அக் கட்டுரையில் பின்வருமாறு தொடர்கிறார்:

“நாவலர் ஐயாவுக்கு இனியும் இங்கே இடமுண்டா?' என்ற தலைப்பில் கலாநிதி பொ. பூலோகசிங்கம் அவர்கள் 13-10-85 ஞாயிறு வீரகேசரியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அக்கட்டுரையில் எனது பெயர் பல இடங்களில் உபயோகிக்கப்பட்டுள்ளது. கட்டுரையின் இறுதியில்,

''தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பவனி சென்று தம் இஷ்ட தெய்வத்தின் சந்நிதியிலே. தான் திருவாவடுதுறை ஒதுவார்களைக் கொண்டு தேவார பாராயணமும் மாகேசுர பூசையும் நடத்துவித்த தெற்கு வீதியிலே எழுந்தருளி இருந்த நாவலர் பெருமானை - ஐந்தாங்குரவரை - தமிழ்ப் பேரறிஞரை - தேசியத் தலைவரை எந்தவிதமாக அப்புறப்படுத்தினார்கள் என்பதைக் கேட்க இன்று யாரும் இல்லையோ? நாவலர் ஐயாவுக்கு இனியும் இங்கே இடமில்லை என்று எல்லோரும் மௌனம் பூண்டுவிட்டார்களா?

இந்நிகழ்ச்சியை அறிந்த ஒரு பேருள்ளம் திருநெல்வேலியிலே நிச்சயமாக அழுது கொண்டிருக்கும். அவ்வுள்ளம் நாவலர் உள்ளம். இன்றைய நிலையிலே அவ்வுள்ளம் வாய்விட்டு யாது கூறுமோ? நாவலர் பெருமானை எங்களுக்கெல்லாம் அறிமுகம் செய்துவைத்தது அவ்வுள்ளம்" - என்ற பகுதி என் உள்ளத்தைத் தொட்டுவிட்டது. அதன் காரணமாக யான் சில கருத்துக்களையேனும் வெளியிட வேண்டிய நிலையில் உள்ளேன்.

நாவலர் காவியப் பாடசாலையில் உண்டியும் உறையுளும் பெற்று வளர்ந்தவன், வாழ்ந்தவன் என்ற பாக்கியத்தினால் நாவலர் சிலை திறப்பு விழாவை ஒட்டிய பெருவிழாவைத் தொடக்கிவைக்கும் ஒரு சந்தர்ப்பம் 1969 யூன் 26 இல் எனக்குக் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதினேன்.

குறித்த விழாவின் தொடக்க உரையில் “நம்மிடம் சிறிதே தவம் இருந்ததனாற் போலும் நாவலர் பெருமானின் ஆத்மசக்தி நமக்கிரங்கி நமக்கு வழிகாட்டும் பொருட்டு, நம் முன்னிலையில் உதயஞ் செய்கிறது. உயர்ந்த இராஜோபசாரங்களுடன் இலங்கைத் தலைநகரிலிருந்து புறப்பட்டு வீதிகள் தோறும் திருவுலாச் செய்து, புஷ்பாஞ்சலிகளும் புகழ்மாலைகளும் பெற்று இங்கே எழுந்தருளியிருக்கிறது.

தமிழரசர்கள் அரசுபுரிந்த யாழ்ப்பாணத்தில் எழுந்தருளியிருக்கிறது. தமிழரசர்களின் இராஜதானியாய் விளங்கியதும் நாவலர் பெருமான் அவதரித்ததும் தமிழ்முருகு அரசு வீற்றிருப்பதுமான நல்லூரை நோக்கி எழுந்தருளியிருக்கின்றது.

நல்லைக் கந்தன் திருவீதியிலே ஆறுமுகப்பெருமானின் திருக்கோயில் நோக்கியவாறே அப்பெருமானை அஞ்சலி செய்து கொண்டே நல்லைநகர் ஆறுமுக நாவலர் பெருமான் அமர்ந்திருப்பார்.

வேலும் மயிலும் துணை என்கின்ற அருமந்த வாக்கியத்தைக் கந்தபுராணம் முற்றுப் பெறுகின்ற இடத்தில் அமைத்து, கந்தபுராணத்தையும் கச்சியப்பப் பெருமானையும் உச்சிமேல் வைத்துப் பூசிக்கச்செய்த நாவலர் பெருமான் அழகுக்கு அழகுசெய்யும் கலைப் பொக்கிஷமான மணி மண்டபத்தில் நமக்கு என்றும் வழிகாட்டியாய் நம் நோக்கங்கள் முளை கொண்டு வளர அபயம் அளித்து அமர்ந்திருப்பார்" என்று குறிப்பிட்டிருந்தேன்.

நாவலர் பெருமான் நல்லூர்க் கந்தசாமி கோயில் அமைப்பையும் சில நடைமுறைகளையும் எதிர்த்தவரேயன்றி (ஆறுமுநாவலர் பிரபந்தத்திரட்டு, நல்லூர்க் கந்தசாமி கோயில்) நல்வார்க் கந்தசுவாமியரை எதிர்த்தவரல்லர். கோயிலாரை வேண்டுமென்றே எதிர்த்தவருமல்லர்.

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் சிலை உருவில், மணி மண்டபத்தில் வீற்றிருந்த நாவலர் பெருமான் நல்லூர் பற்றித் தாம் முன்னர் கூறிய திருத்தங்களை மீண்டும் மீண்டும் அதேயிடத்திலிருந்து சொல்லிக் கொண்டு இருப்பாரேயானால் நாவலர் பெருமான் கூறிய திருத்தங்கள் காலகதியிலேனும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் மேற்கொள்ளப்படலாம் என்பதே எனது கருத்தாகும்.

Home Page Arumuga Navalar's home page Yogaswami's home page

Return to Top