ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

- நவாலியூர் சோமசுந்தரப்புலவர் -

 

டிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!



பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்

பச்சையரிசி இடித்துத் தெள்ளி

வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல

மாவைப் பதமாய் வறுத்தெடுத்து



வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே

வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து

தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்

சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு



வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி

வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்

பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே



பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி

போட்டுமா வுருண்டை பயறுமிட்டு

மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்

மணக்க மணக்கவா யூறிடுமே



குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே

குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து

அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் படைப்பும் படைப்போமே



வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே

வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே

அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே



வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல

மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்

கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே



ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

 


Home Page Kids Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top