பேராசான் சதாவதானி நா. கதிரவேற்பிள்ளை

SATHAAVATHAANI N. KATHIRAVETPILLAI

(1871 - 1907)
 

முப்பத்தாறு ஆண்டுகளே வாழ்ந்த யாழ்ப்பாணத்து மேலைப் புலோலி சதாவதானம் நா. கதிரவேற்பிள்ளை, வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் அர்ப்பணித்துப் பெருங்கீர்த்தி பெற்ற பெருஞ்சொற் கொண்டல் ஆவார்.

'தமிழ்த் தென்றல்' திரு வி. க. வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கிய குருநாதர் கதிரவேற்பிள்ளை!

'சென்னை வெஸ்லி கலாசாலையில், யான் மாணாக்கனாயிருந்த போது, யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளையவர்களது அன்புக்கு உரியவனானேன். ஆங்கிலத்தில் பித்துக் கொண்டு திரிந்த எனக்குத் தமிழில் வேட்கயை எழுப்பியவர் அவரேயாவர்' எனத் தம் வாழ்க்கைக் குறிப்பில் நெகிழ்ந்து கூறியுள்ளார் திரு வி.க.

இரு மொழி அகராதிகள் பல படியாய்த் திருத்தமடைந்து வெளிவரினும், ஒரு மொழி அகராதி சிறப்பும், பயனும் உள்ளதாக வெகு காலம் வெளிவராதிருந்தது. அந்தக் குறையைப் போக்கும் முயற்சியில் சில காலம் ஈடுபட்ட கதிரவேற்பிள்ளை, ஓர் அரிய தமிழ் அகராதியை இயற்றிப் பதிப்பித்து வெளியிட்டார். பிள்ளையவர்கள் வெளியிட்ட பேரகராதிக்குப் பல பதிப்புகள் வெளிவந்தன. ஆராய்ச்சி அறிஞர் வையாபுரிப் பிள்ளை, "கதிரவேற்பிள்ளை வெளியிட்ட அகராதியே திருத்தமும், பொருத்தமும் கொண்டு, பிழைகளறப் பதிப்பித்த முதற் பேரகராதி!" எனப் போற்றினார். மதுரைத் தமிழ்ச் சங்க நிறுவனரும், பாலவநத்தம் ஜமீந்தாருமாகிய பாண்டித்துரைத் தேவர், அந்த அகராதியைக் கண்ணுற்ற போது அக மகிழ்ந்து சிறப்புப் பாயிரமாகச் செய்யுள் ஒன்றை அனுப்பி கதிரவேற்பிள்ளையைப் பாராட்டினார். அறிஞர் உலகம், அகராதிப் பணியை 'அரிய தமிழ்த் தொண்டு' எனக் கூறி வியந்து மகிழ்ந்தது.

இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளில், பழனித் திருகோயிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்தன. உள் கோயிலைச் சுற்றியுள்ள சுவர்களில் முருகப் பெருமானின் திருவருட் கருணையைச் சித்தரிக்கும் ஓவியங்கள் வரையலாமென அறங்காவலர் குழு தீர்மானித்தது. காட்சிகளி அமைக்க ஏதாவதோர் இலக்கியத்தை ஆதாரமாகக் கொள்ள வேண்டுமெனும் எண்ணத்தில், அறங்காவலர் குழு, ஒரு முகமாகத் திருநூல் ஒன்றைத் தேர்வு செய்தது. அத்திருநூல் முருக பக்தர் யாழ்ப்பாணம் கதிரவேற்பிள்ளை இயற்றியிருந்த "சுப்பிரமணிய பராக்கிரமம்" எனும் அருள் நூலாகும். இப்பெரு நூலின் அற்பத்து நான்கு பாடல்களை ஆதாரமாகக் கொண்டே ஓவியங்கள் எழுதப் பெற்றன. அமுதத் தமிழ்த் தொண்டு, ஆறுமுகச் செவ்வேளைத் தொழுது போற்றி எழுதி வெளியிட்ட, "சுப்பரமணிய பராக்கிரமம்", கதிரவேற்பிள்ளையின் தமிழாற்றலையும், முருக பக்தியையும் தெளிவாக எடுத்தியம்பும் தெய்வப் பனுவல்.

யாழ்ப்பாணம் ஸ்ரீ சரஸவதி பீடம் கந்தப்ப சுவாமிகள், தமக்குற்ற கொடுநோயைத் தாங்கிக் கொள்ள மாட்டாது, அதனை நீக்கிக் கொள்ளும் முயற்சியில், ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று, தரிசித்து, நோய் நீங்காது வருந்தினர். கதிர்காமத் திருத்தலத்தை அடைந்து தரிசித்து நின்றபோது, நோயின் கடுமை பளிச்சென விலகிப் போனதை உணர்ந்து உருகிப் போனார். உருக்கத்தின் பெருக்கம், தமிழறிந்த கந்தப்ப சுவாமிகள், ஒரு நூல் இயற்றி முருகப் பெருமானைப் போற்றிடச் செய்தது. "கதிர்காமக் கலம்பகம்" எனும் அத்திருநூல் செல்லரித்து மறைந்து விடா வண்ணம் பாதுகாத்தும், பின் பதிப்பித்தும் வழங்கிய பெருமை பிள்ளையவர்களுக்கே உரியது. பதிப்பித்து வெளியிட்ட போது, தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர்,

"கந்தப்பர் செய்த கதிர்காமக் கலம்பகத்தை,

சந்தமொடும் அச்சிட்டான் சால் புறவே - சந்தமுங்

கந்தனடி பேணுங் கதிரவேற் பிள்ளை யெனும்.

அந்த தமிழ்ப் பாவாணன் இனிது ஆய்ந்து!"

என மகிழ்ந்து பாடிப், போற்றிப் பாராட்டினார்.

'பழனித் தலப் புராணம்', 'திருவருணைக் கலம்பகம்', 'சிவராத்திரிப் புராணம்' ஆகிய நூல்களுக்கு உரை எழுதிய கதிரவேற்பிள்ளை, அதிவீரராம பாண்டியன் இயற்றிய தமிழ்க் கூர்ம புராணத்திற்கு விளக்கவுரை கண்டார். புலமை கொண்டோர் போற்றும் நைடதத்துக்கு ஓர் ஆய்வுரை எழுதிய பிள்ளையவர்களின் நுண்மான் அறிவு நலத்தைப் பாராட்டாத தமிழ்ப் பண்டிதர்களே இல்லை எனலாம். புதுக்கியும், திருத்தியும் விளக்கியும் இணைத்து வழங்கிய விருத்தியுரை, புலவர் பெருமக்களுக்குப் பெரிதும் வியப்பை அள்ளி வீசியது.

யாழ்ப்பாணம் மேலைப் புலோலியில் வாழ்ந்த நாகப்ப பிள்ளை, சிவகாமி அம்மையாரின் இல்லறப் பயனாக, 1871 ஆம் ஆண்டு பிறந்த கதிரவேற்பிள்ளை, அயலில் இருந்த சைவப் பிரகாச வித்தியாசாலையில் தொடக்கக் கல்வி பெற்றார். குடும்பத்தின் வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்புக்கு மேல் அப்பெருமகனார் படிப்பைத் தொடர இயலவில்லை.

கணக்கராக, ஒரு வீட்டில் வேலை பார்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, 'படிக்க வில்லையே? படிக்கவில்லையே!' என்ற ஏக்கம் அப்பெருந்தகையை இரவு பகலாக இன்னலுறச் செய்தது. எப்படியாவது கற்றுக் கொள்ளவேண்டுமெனும் பற்று, அப்பெருந்தகையை சென்னைக்குப் பயணப்பட வைத்தது.

சென்னையில், தமிழ் கறக விரும்பியவருக்கு தி.க.கனகசுந்தரம்பிள்ளை ஒரு கலங்கரை விளக்கமாகத் தோற்றமானார். புலமையும், கருணையும் கொண்டிருந்த கனகசுந்தரம்பிள்ளை, கதிரவேற்பிள்ளையை மாணவராக ஏற்றுக் கொண்டார். தமிழின் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்ததோடு, சைவ சித்தாந்த சாத்திரங்களையும் பயின்று புலமை பெற்றார் கதிரவேற்பிள்ளை. வடமொழியிலும் உரம்பெற்ற பிள்ளையவர்கள், சென்னை ரிப்பன் அச்சகத்தின் அதிபர் சிவசங்கரன் செட்டியாரின் பழக்கத்தால், தாள் திருத்தும் பணியை ஏற்று, படிக்கின்ற காலத்திலேயே, சென்னையில் செலவுக்கு வேண்டியதை ஈடு செய்து கொண்டார்.

கதிரவேற்பிள்ளை, தமது இருபத்தாறாம் வயதில் 1897 ஆம் ஆண்டில், சென்னையில் இருந்த உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணி ஏற்றார். அப்போதுதான், திரு. வி.கல்யாணசுந்தர முதலியார், பிள்ளையவர்களின் மாணாக்கராகும் பேறு பெற்றார். ஆசிரியரின் அறிவூட்டமும், ஆசார நாட்டமும் திரு. வி.க. வைப் பெரிதும் கவர்ந்தன. கதிரவேற்பிள்ளையின் பேச்சுத் திறன், சென்னையில் மட்டும் அல்லாது, தமிழகமெங்கும் புகழ் பெற்றது. எனவே, தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று, தமிழ் ம்மெழியின் செழுமைக்கும், சைவ நெறியின் வளர்ச்சிக்கும் உரையாற்றி, அன்பர்களின் உள்ளங்களில் உரமேற்றிக் கீர்த்தி பெற்றார் அப்பெருந்தகை.

சைவத் தமிழ் உலகம் போற்றி வந்த திருமறைகளே 'அருட்பா' என்றும் வள்ளல் பெருமான் இராமலிங்கர் பாடியுள்ளவை 'மருட்பா' என்றும் சைவநெறிப் பற்றால் கூறத் துணிந்தார் கதிரவேற்பிள்ளை. இதனால், 'அருட்பாப் பூசல்', பெருமான் ஆறுமுக நாவலர் காலத்தில் தொடங்கியது, மீண்டும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் நடைபெறலாயிற்று. பேசியதோடு, இராமலிங்க சுவாமியின் பாடல்கள் மருட்பாவேயன்றி, அருட்பா அல்ல எனக் கதிரவேற்பிள்ளை 'மருட்பா மறுப்பு' எழுதியதை ஆதாரமாக வைத்து, சென்னை நீதிமன்றத்தில் வள்ளல் பெருமான் அன்பர்களால் பிள்ளையவர்களின் மீது மானநஷ்ட வழக்குத் தொடரப் பெற்றது. இந்த வழக்கில், தமது ஆசிரியர் கதிரவேற்பிள்ளைக்கு ஆதரவாக திரு. வி. க. சாட்சியம் சொன்னது குறிப்பிடத்தக்கது. இறுதியில், நீதிபதியால் வழக்கு தள்ளுபடி செய்யப் பெற்றது.

தமிழ்நாட்டுச் சைவ மடங்களாலும், குறுநில மன்னர்களாலும், புரவலர்களாலும் வழங்கப் பெற்ற 'நாவலர்', 'சைவசித்தாந்த மகாசரபம்', 'அத்துவித சித்தாந்த மகோத்தாரணர்', 'மகாவித்துவான்', 'பெருஞ்சொற்கொண்டல்' முதலிய எண்ணற்ற பட்டங்கள் பிள்ளையவர்களின் பெயரை மொய்த்தன. சென்னை இலக்குமி விலாச மண்டபத்தில் கவிராயர்கள், பண்டிதர்கள், புரவலர்கள் முன்னிலையில் கதிரவேற்பிள்ளை சதாவதானம் செய்து 'சதாவதானி' என்னும் பட்டத்தையும் பெற்றார்.

மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவராகத் திகழ்ந்த கதிரவேற்பிள்ளை, தமிழ்ப் பணி ஏற்றி, அடிக்கடி சென்னையிலிருந்து நீலகிரி சென்று வந்தார். 1907 ஆம் ஆண்டில் ஒருமுறை நீலகிரி சென்றபோது, அங்கு கடுஞ்சுரத்தால் உடல் நலிவுற்று, இறைவனடி சேர்ந்த செய்தி, தமிழுலகத்தையும் சைவ உலகத்தையும் திடுக்கிடச் செய்தது. திரு. வி.க., தமது குருநாதர் நினைவைப் போற்றும் வகையில், அப்ப்ருந்தகையின் தமிழ் வாழ்வை அரியதொரு நூலாக எழுதி வெளியிட்டு, அதன் வாயிலாக தமிழுள்ளங்களின் நன்றிக்கடனை நிறைவு செய்து மகிழ்ந்தார்.

எழுதியவர்: குன்றக்குடி பெரியபெருமாள்

வடலூர் இராமலிங்கர் பாடல்களும் நீதிமன்றமும்

நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து பிரபல பிரமாணங்காட்டித் தேவாராதி பன்னிரு திருமுறைகளே அருட்பாவாகும். இராமலிங்கரின் பாடற் றொகுதி அருட்பாவன்று எனத் தீர்ப்புப் பெற்ற வெற்றி வீரர் நா. கதிரை வேற்பிள்ளை, அவருக்கு. மாணாக்கர் திரு.வி.க. அத் திரு வி.க.,
 

"அருட்பா வென்பது ஆறிரு முறையே என்று
அரசமன்ற மேறிப் பசுமரத் தாணிபோல் நாட்டி"
என்றும்
.....................................................................
"மன்னவர் நீதி மன்றினி லேறிப்
பன்னிரு முறையே உன்னருட் பாவென்
றாணி பசுமரத் தறைந்தா லென்னக்
காட்டிச் சாத்திரம் நாட்டின னெவனோ
.....................................................................
................................................................
கதிரைவே லென்றொரு மதுரப் பெயருடைத்
தவன னெவனோ வவனது ஞாபக
சின்னம தாகச் செய்தனம்
உரிமை யுலகமு முவந்திட வினிதே'

 

-பெரிய புராணம் - குறிப்புரை by திரு.வி.க. 1910-வது வருடப் பதிப்பு. (உரிமையுரை)
என்றுங் கூறி, அக் கதிரைவேற் பிள்ளையை வந்திக்கிறார்,

நன்றி: நாடும் நவீனரும்


"யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம் - சதாவதானி நா கதிரவேற்பிள்ளை சரிதம்" - இயற்றியது திரு வி. கல்யாணசுந்தரனார்.

HOME

Return to Top