நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை

A. Muthuthamby Pillay

(18/04/1858 - 02/11/1917)
 

மிழினத்திற்குப் பெருமை சேர்த்த அறிஞர்கள் பலர் யாழ்ப்பாணத்தில் தோன்றியுள்ளனர். இவர்களில் ஒருவர் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள்.

18.04.1858-இல் மானிப்பாயில் பிறந்த முத்துத்தம்பிப்பிள்ளையின் தந்தை ஆறுமுகம். தாய் சீதேவி. தமது 25-ஆவது வயதில் சண்டிருப்பாயைச் (தற்போது சண்டிலிப்பாய்) சேர்ந்த கந்தப்பர் என்பவரின் மூத்த மகளான தங்கம்மாவைத் திருமணஞ் செய்தார்.

பிள்ளையவர்களின் ஆரம்பக்கல்வி பி.எஸ். பேஜ் என்ற ஆசிரியரிடம் அவரின் வீட்டிலேயே ஆரம்பமானது. இந்த வீடு பின்னாளில் மானிப்பாய் மெமோறியல் கல்லூரியாக மாறியது. ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உவெஸ்லியன் மத்திய வித்தியாசாலையில் படித்தார். ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகியவற்றை நன்கு கற்ற பிள்ளையவர்கள், இலக்கணக் கொட்டர் எனப் புகழ் பெற்ற, குடந்தை வெண்பா முதலிய பாடல்கள் இயற்றிய சுன்னாகம் முருகேசப் பண்டிதரிடம் தமிழைச் சிறப்பாகக் கற்றார்.

தமது பதினெட்டாவது வயதில் நாவலப்பிட்டி சென்று இலங்கை கம்பெனித்தோட்டத்து (Ceylon Company Estates) அதிகாரிக்கு முன்ஷியாக (ஆசிரியராக) தொழில் புரிந்தார். இரு ஆண்டுகளின் பின் (1880இல்) தமிழகம் சென்று திருத்துறைப்பூண்டியில் அழகியநாதன் செட்டியாரின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார். சில மாதங்களின் பின் நாகப்பட்டினத்திலுள்ள Anderson & Co என்ற கப்பற்றொழில் நிறுவனத்தில் இவர் இரண்டரை ஆண்டுகள் தலைமை எழுதுவினைஞராகத் தொழிலாற்றினார். பின்னர் தமிழார்வத்தால் பிள்ளையவர்கள் உந்தப்பட்டு 1884-ல் காரைக்கால் சென்றார். அங்கே திருவாங்கூர்ப் பகுதியைச் சேர்ந்த தவசிமுத்துநாடார் என்னும் செல்வந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி 'சத்தியாபிமானி' என்ற வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியேற்றார். நாடாரையும் அவர் குடும்பத்தையும் இழித்துரைப்பதையே தன் தொழிலாகக் கொண்ட வேறொரு பத்திரிகையின் செல்வாக்கு இதனால் சரிந்தது. அது மட்டுமல்லாமல் பிள்ளையவர்களின் நேர்மைமிகு எழுத்தால் அதன் ஆசிரியருக்கும் சிறைத்தண்டனை கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த நாடார் பிள்ளையவர்களுக்கு செய்த பொருளுதவி தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்குப் பயன்பட்டது.

1885-ல் சென்னை சென்ற முத்துத்தம்பி அந்தர்சன் தெரு என்ற இடத்தில் யுபிலி அச்சுக்கூடம் என்ற பெயரில் ஓர் அச்சியந்திரசாலையை நிறுவினார். சி.வை. தாமோதரம்பிள்ளையின் 'தொல்காப்பியம்' சொல்லதிகாரப்பதிப்பும், உ.வே.சாமிநாதையரின் சிலப்பதிகாரப் பதிப்பும் இதன்மூலமே வெளிவந்தன.

1893-ல் யாழ்ப்பாணம் திரும்பிய முத்துத்தம்பிப்பிள்ளை, வண்ணார்பண்ணையில் தவத்திரு ஆறுமுகநாவலர் குடியிருந்த வீட்டை வாங்கி அதற்கு 'நாவலர் கோட்டம்' எனப்பெயரிட்டு, அங்கிருந்து பல பணிகள் புரிந்தார். நாவலர் வழியில் பணியாற்றிய பிள்ளையவர்கள், நாவலர் அச்சுக்கூடம் என்ற ஒரு அச்சியந்திரசாலையையும் நிறுவினார்.

ஒரு புத்தகசாலையும், Ward & Davy என்ற பெயரில் பலசரக்கு மருந்துகள் விற்கும் ஒரு கடையும் அவரால் நிறுவப்பட்டன. 1898-இல் 'தமிழ் வைத்திய விசாரணி' என்னும் சஞ்சிகை இவரால் பிரசுரிக்கப்பட்டது. இதில் மேலைநாட்டு கீழைநாட்டு வைத்திய முறைகளை ஒப்பிட்டு கட்டுரைகள் வெளிவந்தன. இறந்தவரை எரிப்பதில் உள்ள சுகாதாரச் சிறப்பு, புதைப்பதில் உள்ள கேடு, கன்மக் கொள்கை, விபத்துக்கள் போன்றவை பற்றி எழுதினார்.

1898-இல் ஆறுமுகநாவலரின் மருமகனும், அவரின் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கு பற்றியவருமான த.கைலாசபிள்ளை அவர்களால் ஒரு தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. இதில் ஈடுபட்டு ஒத்துழைத்த பிள்ளைகளுக்கு மதுரைத் தமிழ்ச் சங்கத்துடனும் தொடர்பு ஏற்பட்டது. மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய செந்தமிழ் மாத இதழில் பல ஆய்வுக் கட்டுரைகள் (1902-1917) எழுதி வந்தார்.

முத்துத் தம்பிப்பிள்ளையவர்கள் எழுதிய பல நூல்களில் இலங்கைச் சரித்திரச் சூசனம், அபிதான கோசம், ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதி, யாழ்ப்பாணச் சரித்திரம் ஆகியவை குறிப்பிடத்தக்கன. அபிதான கோசம் 1902-இல் யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழ் மொழியிலே முதன் முதலாகத் தோன்றிய இலக்கியக் கலைக்களஞ்சியம் அபிதானகோசம் என்று கூறலாம். வடமொழி, தென்மொழி ஆகிய இருமொழிகளிலும் இயற்றப்பெற்ற வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், தருமநூல்கள், இலக்கியங்களிற் காணப்பெற்ற தெய்வம், தேவர், இருடி, முனிவர், அசுரர், அரசர், புலவர், புரவலர் முதலிய விபரங்களை அகர வரிசையிலே தொகுத்தளிக்கப்பட்டது அபிதான கோசம். தமிழகத்தில் சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (1910) வெளிவர முன் இது வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

ஆறுமுகநாவலரிடம் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு அவர் வழியில் பணிபுரிந்த பிள்ளையவர்கள் தமிழ்மானத்தோடு சைவநெறி தவறாது இறுதி வரை வாழ்ந்தவர். இப்பெருமகன் 02-11-1917 இல் இறைவனடி சேர்ந்தார்.

எழுதியவர்: சித்தாந்தரத்தினம் க.கணேசலிங்கம்

ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் (நான்காம் பதிப்பு Feb 2000) நூலிலிருந்து எடுக்கப்பட்டது.



ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் நூல்கள்:

வெளியிட்ட இதழ்கள்:

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top