புலவர்மணி கவிசிந்தாமணி
பண்டிதமணி சோ. இளமுருகனார்
அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள்


- கலாநிதி சிவத்திரு க.வைத்தீசுவரக்குருக்கள் -

புலவர்மணி இளமுருகனார் தமிழ் மரபு நிலைபெறவும் சைவசித்தாந்த நெறி சால்புறவும் நல்லோர் பலரை ஈன்று புகழ் பெற்ற நவாலியம்பதியிலே தமிழ் கூறும் நல்லுலகலம் அன்போடு ‘தங்கத் தாத்தா’ என்றழைக்கும் சோமசுந்தரப்புலவர் அவர்களுக்கும் சின்னம்மையார் என்னுஞ் செந்தமிழ்த் திருவுக்கும் கீலக ஆண்டு வைகாசித் திங்கள் முப்பதாம் நாள் (11.06.1908) வியாழக்கிழமை தோன்றினார். நவாலியூரிற் பிரபல கல்விமானாக விளங்கிய இராமலிங்க உபாத்தியாயர் நமது புலவர்மணிக்கு ஏடு தொடக்கி வைத்தார். வளர்மதியென வளர்ந்த இளமுருகனார் கிராமப் பாடசாலையிலே தொடக்கக் கல்வியை முடித்தபின் தந்தையார் ஆசிரியப் பணிபூண்ட வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் ஆங்கிலமும் செந்தமிழுங் கற்றுத் தேறினார். தந்தையார்பால் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் சோதிட நூலையும் கற்றுத் தெளிந்து, பொதிகை முனியெனப் பொலிவெய்தினார்

ஆண்டில் இளைஞராய் அறிவில் முதியராய் விளங்கிய புலவர்மணி ஆனைக்கோட்டை அரசினர் வித்தியாசாலை கட்டுடைச் சைவத் தமிழ்ப் பாடசாலை அளவெட்டி அருணோதயாக் கல்லூரி என்பவற்றில் இளமைக் காலத்தே இருமொழி ஆசானாய்க் கடமை ஆற்றினார். ஆசானாக இருந்துகொண்டே தமிழ்ப் பண்டிதர் தேர்விற்குத் தோற்றிச் சித்திபெற்றுப் பண்டிதர் என்னும் விருதினைப் பெற்று மகிழ்ந்த இளமுருகனார் கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையிற் சேர்ந்து பயின்று, பயிற்சிபெற்ற ஆசானாய் வெளியேறினார்.

ஈழநாட்டிலே புகழ்பெற்று விளங்கிய சோமசுந்தரப்புலவரின் இல்லம் அந்நாளிற் கலைக்கோவிலாகத் திகழ்ந்து விளங்கியது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தமிழறிஞர்கள் புலவர்கள் அங்கு வந்து செல்வது வழக்காறாய் இருந்தது. அங்ஙனம் வந்து மீள்வோர் இளமுருகனாரின் கூர்த்த மதியையும் ஆழ்ந்தகன்று தெளிந்த தமிழ்ப் புலமையையும் பாராட்டி மகிழ்ந்தனர். இவர் வித்துவசிரோமணி சி. கணேசையர், பண்டிதர் ம. வே. மகாலிங்கசிவம், பண்டிதமணி சு. நவநீதகிருட்ணபாரதியார் முதலிய ஈழத்தமிழ் அறிஞர்களுடன் நெருங்கிப் பழகினார். அவர்களிடம் புதைந்து கிடந்த ஒப்பற்ற ஆற்றல்களையெல்லாம் தமதாக்கிக் கொண்டார். பரம்பரை பரம்பரையாக வளர்ந்து வந்த ஞானத்திருவைத் தந்தையாரிடமிருந்து பெற்றுக்கொண்டார். தென்னகத்திற் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்த தமிழ்ப் பேரறிஞர்களான மறைமலை அடிகள், திரு. வி. கலியாணசுந்தரனார் முதலானோரின் தொடர்பும் வந்தெய்திற்று. இளவழகனார் முதலான தமிழ் அறிஞர்களுடன் அஞ்சல் வழியே பழகிக் கேண்மை பூண்டுகொண்டார். புலவர்மணி அவர்களின் ஆற்றலும் அறிவும் மறைமலை அடிகளாரைப் பெரிதுங் கவர்ந்தன. அடிகளார் முருகனாரிடம் அளவற்ற பேரன்பும் நம்பிக்கையும் உடையராய்த் திகழ்ந்தார்.

பண்டை நாளில் தண்டமிழ்ச் சான்றோர்களாற் கட்டி எழுப்பப்பட்டு சிவஞானமுனிவர் ஆறுமுகநாவலர் சுன்னைக் குமாரசுவாமிப் புலவர் முதலான செம்புலச் செல்வர்களாற் போற்றிக் காக்கப்பட்டு வந்த செந்தமிழ் மரபு சிதைந்து போதல் கண்டு சிந்தை நொந்தார். சைவ சமயம் இந்து சமயம் என்ற போர்வையின் கீழ் வஞ்சிக்கப்படுவதை அறிந்தார். தனியொருவனாகத் தமிழ் மரபு ஓம்பும் பணியிற் குதித்தார். களம் புகுந்த புலவர்மணி தமிழ் வரம்பழிக்கும் தகவிலோரையெல்லாஞ் சாடி வெற்றிமாலை சூடிச் செந்தமிழ்த் தாயின் சிறுமை தீர்த்து மகிழ்ந்து நின்றார். இவர் தமிழ்ப் பாதுகாப்புக் குறித்து எழுதிய கட்டுரைகளும் கண்டனவுரைகளும் ஈழகேசரி தினகரன் முதலிய வெளியீடுகளில் வெளிவந்துள்ளன. ஆரியம் ஆங்கிலம் முதலிய அயன் மொழிச் சொற்களைத் தமிழ்நடைப் படுத்தி எழுதும் நிலையினை மீண்டும் நிலைநாட்டி வெற்றி கண்டார். தமிழ்க் கல்வி இலக்கண பாடம் இன்றி வரம்பழிந்து போதல் கண்டு அரசினரை அணுகி இலக்கணப்பாடத்திட்டம் வரைந்து பாடநூல்களை ஆக்குவித்துத் தமிழுக்கு ஆக்கஞ் செய்தார். தமிழ் நெடுங்கணக்கை மாற்றியமைக்கவும் சில செயற்கை ஒலிகளைப் புதுவதாகப் புகுத்தவும் தென்னகத்து அறிஞர்களும் செய்தித்தாள் ஆசிரியர்களும் முயன்றபோதும் தனியொருவராய் எதிர்த்து நின்று பல்வேறு கட்டுரைகளை வரைந்து கண்டனக் குரல் எழுப்பி அவர்தம் முயற்சியைத் தடுத்து நிறுத்தினார். இவ்விவாதம் ஏறத்தாழ ஆறு திங்கள்வரை நிகழ்வுற்றது.

புலவர்மணி கவிசிந்தாமணி ஆசிரியர் பயிற்சிக்கழகங்களில் அருந்தமிழ்ப்பணி

கோப்பாய் அரசினர்ஆசிரிய கலாசாலையில் தமிழ்ப் புலமை நடாத்திய மகாலிங்கசிவம் அவர்கள் இயற்கையெய்திய பின் அப்பதவிக்கு மிகமிகப் பொருத்தமானவர் இவரே யெனக்கண்டு நியமிக்கப்பட்டார். இவர் பணியினால் அக்கழகம் பெருமை பெற்றது. புலவர்மணி கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கழகத்தில் ஏறத்தாழ 15 ஆண்டுகள் தலைமைத் தமிழாசிரியராகக் கடமை புரிந்துள்ளார். அக்காலத்தே பல ஆசிரியர்களையும் ஆசிரிய மாணவர்களையும் வண. குருமார்களையும் தமிழ் கற்கத் தூண்டிப் பண்டிதர்களாக ஆக்கியுள்ளார். அதிபர் வண. சிங்கராய சுவாமிகள் ஓ.எம்.ஜ.எம்.ஏ (இலண்டன்) அவர்களின் வேண்டுகோளின்படி மகாகவி செவப்பிரியர் (Shakesphere) எழுதிய கமலேசன் (Hamlet) என்னும் நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து நடிப்பித்து அறிஞர்களின் பாராட்டையும் பெற்றார். திருநெல்வேலிப் பரமேசுவரா ஆசிரிய கலாசாலையில் மாவை நவநீதகிருட்ணபாரதியாருடன் சேர்த்து விரிவுரையாளராய்ச் சீரிய பணி புரிந்த இவர் கலாநிதி திரு. கு. சிவப்பிரகாசம் எம். எஸ்.சி. அவர்களைத் திருவாசகத்தில் ஈடுபட்டுக் குழைவுறும் வண்ணம் செய்தார்.

தமிழுரிமைப் போரும் தலைவர் பணியும்

தமிழ் மொழி சைவத்திருநெறி என்பவற்றிற்கு மகத்தான தொண்டு புரிந்த கவிமணியவர்கள் உரிமை வேட்கையிலும் உறைப்புற்று நின்றவர். வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் ஈழத்தில் நிலைபெற்று நின்ற தமிழ் மொழியின் உரிமை பறிக்கப்பட்ட போது பொங்கி எழுந்தார். தந்தை செல்வாவின் தலைமையில் இயங்கிவந்த சமஸ்டிக் கட்சியின் பெயரைத் 'தமிழரசுக் கட்சி" என மாற்றி வைக்கப் பெரும்பாடுபட்டு வெற்றிகண்டார். தமிழ் அரசியற்; கட்சிகளுடன் இணைந்து அல்லும் பகலும் அயராது பாடுபட்டார். அரசியல் மேடைகளை இளமுருகனாரின் சங்கநாதம் அழகு செய்தது. இயல்பான நகைச்சுவையோடு கூடிய அவரது அரசியற் பேச்சுக்களைக் கேட்கப் பொதுமக்கள் பல்லாயிரமாகத் திரண்டு வந்தனர். தமிழார்வத்தைக் தட்டி எழுப்பி உரிமை வேட்கையை ஊட்டவல்ல பல எழுச்சி இலக்கியங்களைப் படைத்தார்;. இவர் யாத்த திருமலை யாத்திரை அறப்போர்க்கு அறைகூவல் இலங்கைமாதேவி திருப்பள்ளியெழுச்சி குயிற்பத்து முதலியன மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டன. அமரர் பண்டாரநாயக்கா முதலமைச்சராய் இருந்த போது தமிழின் அருமை பெருமைகளை அறிவுறுத்தி உரிமை கோர முற்பட்டார். அதனாலே தமிழின் தொன்மை இனிமை தெய்வத்தன்மை இலக்கண இலக்கிய வளம் தமிழ்ப் பெருங்குடிகளின் தொன்மை என்போன்றவற்றை விளக்கிச் செந்தமிழ்ச்செல்வம் என்னும் உயரிய நூலை யாத்து அதன் பொருளை ஆங்கிலத்திலே சுருக்கித் தந்து அனுப்பி வைத்தார். செந்தமிழ்ச்செல்வம் இன்று சீரிய இலக்கியமாகத் திகழ்கின்றது.

பரிசிலும் வரிசையும் பாங்குடன் பெறுதல்

ஓய்வு பெறுவதற்கு முன் தான் கடமை புரிந்த உடுவில் மகளிர் கல்லூரியில் எக்காலத்தும் கண்டிராதவாறு தமிழ் உணர்வினை ஏற்படுத்திய ஆசிரியர் தமயந்தி திருமணம், அரிச்சந்திரன், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய நாடகங்களை எழுதி மாணவிகளைக் கொண்டு நடிப்பித்தார். இந்நாடகங்கள் கல்லூரிக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தன. புகழையும் பொருளையும் விரும்பாது ஓய்வொழிவின்றித் தமிழப் பணி புரிந்த புலவர்மணி அறிவிலிகளைச் சாடித் தமிழ் மரபு பேணி நின்றார். அவர் விரும்பாத போதும் பரிசில்களும் வரிசைகளும் அவரை நாடி வந்தன. அவற்றை விபரிப்பது மிகைப்படக் கூறலாய் அமையுமேனும் 1936 இல் பயிற்சிக் கலாசாலை மாணவனாய் இருந்த காலத்திலும் கயரோகச் சிந்து பாடிய காலத்திலும் கிடைத்த தங்கப் பதக்கங்களைப் பரிசில்களாகப் பெற்றமையைக் கூறாமல் இருக்க முடியவில்லை.

கவிசிந்தாமணி பட்டம்

இவரின் தமிழ்ப்பணிக்காகப் பல சபைகள் பொன்னாடை போர்த்துப் பொற்கிழி வழங்கியுள்ளன. அன்றியும் தமிழ் அறிஞர்கள் இவருக்குப் புலவர்மணி வரிசை தந்து போற்றினார். ஆதீனங்கள் பட்டங்கள் தந்து கௌரவித்தன. காஞ்சிபுரம் மெய்கணடார்; ஆதீன மகா சந்நிதானமாகிய சீலத்திரு ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் கவிசிந்தாமணி என்னும் வரிசையை நல்கிக் களிப்புற்றார்.

புலவர்மணியின் படைப்புகள்

ஈழத்துச்சிதம்பர புராணம், செந்தமிழ்ச்செல்வம், பூரணன் கதை, இலக்கணச் சூறாவளி, தொல்காப்பிய முதநூற்ச் சூத்திர விருத்தி, செந்தமிழ்வழக்கு, அரங்கேற்று வைபவம், வேனில் விழா, கப்பற்பாட்டு, கவிதைவியல், சொற்கலை, கயரோகச்சிந்து, சுருக்கெழுத்துச் சூத்திரம் முதலியன இவரின் சிறந்த படைப்புக்களாகும். குறிஞ்சிப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, பொருணராற்றுப்படை, மதுரைக்காஞ்சி, ஜங்குறுநூறு என்பனவற்றக்கும் இவர் விளக்கவுரை எழுதியுள்ளார். தமயந்தி திருமணம், கமலேசன், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நாடக நூல்களையும் புலவர்மணி யாத்துள்ளார். இலங்கைமாதேவி திருப்பள்ளியெழுச்சி, அறப்போருக்கு அறைகூவல், திருமலை யாத்திரை என்பன இவரியற்றிய அரசியற்பாடல்களாகும்.

புலவர்மணியின் நூல்களுக்கெல்லாம் சிகரம் போன்று விளங்குவது ஈழத்துச் சிதம்பர புராணம் ஆகும். இக் காப்பியத்தை இயற்றியதன்மூலம் ஈழத்துப் பூதன்தேவனார் பரம்பரை அழியவில்லை என்பதை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார். அரசகேசரி யாத்த இரகுவமிசத்தின் பின்னாலே தோன்றிய அமரகாவியம் இப்புராணமே என்பது பேரறிஞர்களின் முடிந்த முடிவாகும். அக்காவியம் பல்வகையழகும் நவரசங்களுந் ததும்பப் பெற்றும் யாவரையும் கவருந் தன்மை கொண்டு விளங்குகின்றது.

இறுதிக்காலம்

அஞ்சா நெஞ்சுடனும் உடலுறுதியுடனும் தமது இளமைக் காலத்தைக் கழித்த புலவர்மணி இறுதிக் காலத்தில் நோயினால் உடல்நிலை தளர்ந்தாலும் மனவுறுதியுடன் தமது கடமைகளைச் செய்து வந்தார். இருந்தும் கடைசி நேரத்தில் நெஞ்சில் உண்டாகிய முட்டு இவரை இறைவன் திருவடி நீழலில் இலகுவாகச் சேர்த்து விட்டது. ஏறத்தாழ 45 ஆண்டுகளாகத் தமிழையும், சைவத்தையும் தமது முச்சாகக் கொண்டு பல திறப்பட்ட நூல்களை ஆக்கியும், கட்டுரைகளை எழுதியும், சொற்பொழிவுகளை நிகழ்த்தியும் தமிழன்னைக்குப் பேரொளி கொடுத்துக் கொண்டிருந்த அணையா விளக்கு இராட்சத ஆண்டு மார்கழித் திங்கள் முதலாந்தேதி (17.12.75) இரவு ஒரு மணியளவில் அவிந்துவிட்டது. எனினும் அவர் தம் நன் மாணாக்கர்கள் அத்தனை பேரும் அவரை அடியொற்றித் தமிழ்த்தொண்டு செய்வராயின் அச்சுடர் அவிந்திலது என்றும், அஃது ஒன்று பலவாய்க் கிழைத்துப் பேரொளி வீசகின்ற தென்றும் துணிந்து கூறலாம்.

புலவர்மணி அவர்கள் இயற்றிய ஈழத்துச் சிதம்பர புராணம் பற்றி அறிஞர்களின் கருத்துகள்

25ஆவது தருமை ஆதீன முதல்வர் சிறீ-ல-சிறீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்:

“ பாட்டுகள் பத்திநலம் தோய்ந்த பழுத்த புலமையைக் காட்டி நிற்கின்றன; இதற்குத் திட்ப நுட்பம் செறிந்த உரையினைப் புலவர்மணி அவர்களின் துணைவியார் பண்டிதைமணி பரமேசுவரியார் அரிதின் எழுதியுள்ளார்.” "புலவர்மணி திரு சோ. இளமுருகனார் அவர்கள் தம்முடைய புலமையினால் திண்ணபுரத்துச் சுந்தரேசர் திருவடிகளிற் பத்தியுடன் சூட்டியுள்ள இத் தலபுராணம் தமிழிலக்கியங்களிற் புதிய தெய்வத் தமிழ்ப் பணியாக விளங்கிச் சிறப்பதாக."

நல்லைத் திருஞாசம்பந்தர் ஆதீன முதல்வர் திருப்பெருந்திரு சுவாமிநாதத் தம்பிரான் அவர்கள்:

"புலவர்மணி இளமுருகனாரின் உள்ளக் கமலத்திலே ஊற்றெடுத்துச் சிவானந்தத் தேன்ததும்பும் அருவியாக வந்ததே இத் தலபுராணம். பாட்டில் அமையவேண்டிய சிறப்புக்கள் எல்லாம் இப் புராணத்திலே அமைந்து திகழ்வதைக் கண்ட இன்புற்றோம். இழுமென்ற இன்னோசையும், விழுமிய நடையழகும், இடத்திற்கேற்ற சந்த அமைதியும், கற்பனை யழகும் பொலிந்து கம்பர் பெருமான் கூறிய "செஞ்சொற் கவியின்பம்" என்பதற்கு இலக்கியமாய் இப்புராணம் மிளிர்கின்றது."

'இப் புராண காவியத்திற்குப் புலவர்மணியின் வாழ்க்கைத் துணைவி பண்டிதைமணி பரமேசுவரியார் மிகச் சிறந்ததோர் உரை எழுதியுள்ளார். அவ்வுரையிலே பாட்டின் பொருணலத்தையும் சைவசித்தாந்த நுண்பொருள்களின் தெளிவையும் படித்து இன்புற்றேன். உரையின் போக்கைக் கருத்தூன்றிக் கற்போர் நச்சினார்க்;கினியர், பரிமேலழகர் முதலியோரின் பழைய உரை அமைதியைக் காணலாம்......".

கலாநிதி கா. கைலாசநாதக் குருக்கள் - விரிவுரையாளர், இலங்கைப் பல்கலக்கழகம்:

"தமிழ் மரபு என்னும் வரம்புக்குட்பட்டு நின்று, தமிழுக்கு எள்ளளவேனும் மாசு ஏற்படாவண்ணம் தூய தமிழிற் கவிதை பாடுவதைக் குறிக்கோளாகக் கொண்டவர். இவர் யாத்துள்ள கவிதைகளிலே தூய தமிழ்மணம் வீசுகின்றது. தெய்வீக மணம் கமழ்கின்றது....."
"புராணத்தில் வரும் செய்யுள்களிலே தேவாரங்களின் எதிரொலியைக் கேட்கிறேன். திருவாசகம் பெருக்கும் உருக்கத்தை நெஞ்சில் உணர்கின்றேன்.அவற்றிலே தெய்வீகமணம் வீசுகின்றது........."
மூலமம் உரையும் ஒன்றி இயைந்து முழு வடிவம் பெற்று உருவான இந்நூல், சைவ சித்தாந்திகட்கு ஒரு வரப்பிரசாதமாகவும், இலக்கிய இரசிகர்களுக்குப் பெருவிருந்தாயும், இலக்கணம் கற்போருக்கு அருந்துணை நூலாகவும், ..................கற்பக தருவென வேண்டுவதெல்லாம் தரும் அரிய நூல்.

 

பதிவு: நவம்பர் 20, 2021

Home Page Kids Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top