If you have trouble viewing this page, please download the font here (right click and select Save Target As)

ஈழத்துக் கோவில்கள் வரலாறு

சீரணி ஸ்ரீ நாகபூஷணியம்மை, சண்டிலிப்பாய்
 


ழத் திருநாட்டின் சைவசமயம், தமிழ்ப்பண்பு என்னும் இவற்றின் தொன்மைக்குச் சின்னமாக விளங்குவன திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் என்னும் இரு சிவத்தலங்களாகும்.

அது போன்று தேவி வழிபாட்டுக்கு யாழ்ப்பாண நாட்டின் இரு கண்களாக விளங்குவன நயினை, சீரணி என்னுமிடங்களில் விளங்கும் நாகபூஷணியம்மை ஆலயங்களாகும்.

தம்மை வழிபட்டுப் பூசித்த நாகமொன்றைத் தம்மருமைத் திருமேனியில் ஆபரணமாய் பூண்ட காரணத்தால் இத்தேவியும் நாகபூஷணியம்மை யென்று அழைக்கப்படுகிறாள். அந்த நாகபூஷணியம்மை சண்டிலிப்பாய் பகுதியைச் சார்ந்த சீரணிப்பதியிற் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய திருவருள் மகிமை மிகவும் பெரியது.

அக்காலத்தில் இப்பதியிலே சாத்திரியார் சண்முகம் பொன்னம்பலம் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஓர் இயந்திரம் வைத்துப் பூசை செய்து பிரபல்யமாகச் சாத்திரம் சொல்லி வந்தார்.

இவருடன் இராமுத்தர் என்னும் ஒருவர் வசித்து வந்தார். சண்முகம் பொன்னம்பலம், இயந்திரத்தைச் சரிவரப் பூசிக்காமையால் அவர் வீட்டிற் சில துர்ச்சகுனங்கள் நிகழ்ந்தன. அவை முத்தர்க்கு பிடிக்காமையாலும், இயந்திரம் இராக்காலத்தே கலகலப்பான பேரொலி செய்தமையாலும் அதனை அப்புறப்படுத்த நினைத்தார். ஒருநாள் முத்தர் நன்றாய் மதுபானம் அருந்திவிட்டுக் குறித்த இயந்திரத்தயும் அத்துடனிருந்த பொருள்களையும் பெட்டியுடன் எடுத்துச் சென்று வீட்டினருகாமையிலுள்ள ஓர் அலரிப் பூம்பற்றைக்குட் போட்டுச் சென்று விட்டார். எம்பெருமாட்டி நாகபூஷணியம்மை இங்குள்ள அன்பர்கள் பலரிடத்தே கனவிற் தோன்றி "நான் நயினை நாகபூஷணி, என்னை ஆதரியுங்கள்" எனக் காட்சியளிப்பாளாயினள். "நாமெல்லோரும் வறியவர்கள் தாயே! எங்ஙனம் எங்களால் ஆதரிக்க முடியும்" என அன்பர்கள் கூறி வருந்தினார்கள். "என்னை ஆதரியுங்கள், தொண்டர்கள் வருவார்கள். செல்வம் செழிக்கும், நாடு நலம்பெறும், வாழ்வு வளம் பெறும்" என்று அவ்வன்பர்களுக்கு அருள் பாலித்துக் குறித்த அன்பராகிய முருகேசபிள்ளைக்குக் கனவிலே வெளிப்பட்டுப் பல முறைகளிலும் பல திருவருட் தன்மைகளைக் காட்டியருளினாள்.

ஒரு முறை ஓரிடத்தைக் குறிப்பிட்டு "இவ்விடத்திலே நம்மைத் தாபித்து வழிபட்டு வருவாயாக" என அம்மை அருளிச் செய்தாள். அவர் தமது நிலைமையை எண்ணி அஞ்சி அச்சொப்பனங்களைப் பிறருக்குச் சொல்லாது தம்முள்ளே சிந்தித்து வழிபட்டு வருவராயினர்.

இங்ஙனமான 1896 விளம்பி வருடம் சித்திரை மாதப் பெளர்ணமி தினத்தன்றிரவு எம்பெருமாட்டி அருள் வள்ளலாகிய பெருமானொடும், பாலசுப்பிரமணிரோடும் சோமாஸ்கந்த மூர்த்தத்தைக் காட்டிச் சொப்பனத்திலே வெளிப்பட்டு, "உனக்குச் சொன்னவைகளை நீ உண்மையென்று சிந்தித்தாய் இல்லை. அதனுண்மையை உனக்கு இப்பொழுது காட்டுவோம். அதோ தோன்றுகின்ற தென்னை மரத்திலே சில இளநீர் பறித்து வந்து தா!" என்று கூறியருளினார். அன்பருக்கு அது ஒரு முதிர்ந்த, வரண்ட படுமரமாகத் தோன்றியது, அதையுணர்ந்த அவர் "அதிற் குரும்பைகள் இல்லையே! யான் உமக்கு எப்படி இளநீர் தரக்கூடும்", என "நன்று! நீ சென்று சமீபத்திலே பார், வேண்டிய குலைகள் தோன்று"மென அம்மையார் அருளினார். அங்ஙனமே அவர் சென்று பார்த்துத் தொங்கும் இளநீர்க்குலைகளைக் கண்டு வியப்பும் அச்சமுங் கொண்டவராய்ச் சில குரும்பைகளைப் பறித்துக் கொணர்ந்து கொடுத்தார். அம்மூவரும் அதிக தாகமுடையார் போலப் பருகினர். பின்னர் அவரை நோக்கி "அன்பனே! இந்த இடத்தைத் தோண்டிப்பார், இங்கு ஒரு சிலை தோன்றும். அதனையே மூலமாக வைத்து ஒரு கொட்டகை அமைத்து வழிபடுவாயாக. சில காலத்துள் பல திசைகளிலுமிருந்து அடியார்கள் வந்து வழிபட்டு இட்ட சித்திகளையெல்லாம் அடைவார்கள். வேண்டிய திரவியங்களையெல்லாம் காணிக்கையாக இடுவார்கள். அவற்றாஇக் கொண்டு திருப்பணிகளைச் செய்யத் தொடங்குக. அது பூர்த்தியாகும் வண்ணம் அருள் செய்வோம். நமக்கு வழிபாடு அன்பின் பூசையேயாகும். மேலும் உனது மனம் புனிதமுறும் வண்ணம் ஒரு மந்திரமும் உபதேசஞ் செய்வோம்" எனவருளி, மந்திரோபதேசமும் புரிந்து மறைந்தருளினார்.

சிலை தோன்றுதல்:

எம்பெருமாட்டியின் பெருங் கருணையை நினைந்து, கண்களினின்றும் ஆனந்த அருவி மல்க, உண்மையை அறியும்படி, குறிப்பிட்ட இடத்தை மறுநாள் அகழ்ந்து பார்த்தார். ஆங்கு ஒரு விம்ப வடிவமைந்த சிலை காணப்பட்டது. அதனைக் கண்டு பரவசப்பட்டவராய் "இனி எல்லாம் ஈஸ்வரியின் செயலால் இனிதாகும்" என்னும் நம்பிக்கையுடனே ஒரு மண்டபம் அமைத்தார். (1896) ஆடிமாதம் திங்கட்கிழமையும் அமாவாசையுங் கூடிய புண்ணியதினத்திலே, பூசை தொடங்கி காலந் தவறாது பக்தி சிரத்தையோடும் நடப்பித்து வந்தார். தேவியருளிய திருவாக்கின்படி நானா திசைகளினின்றும் அடியார்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்தார்கள். நாகபூஷணியம்மையை வழிபட்டனர்.

குட்டம், காசம், ஈளை முதலான கன்ம நோய்களினால் வருந்தியோர் இத்தலத்தை அடைந்து தேவியை வழிபட்டுத் தம்நோய்கள் தீரப் பெற்றனர். நாக சாபத்தினாலே நீண்டகாலம் பிள்ளைப் பேறில்லாதவர்கள் எம்பெருமாட்டி எழுந்தருளியிருக்கும் இத்தலத்தையடந்து வந்தனை வழிபாடுகள் புரிந்து பிள்ளைச் செல்வம் பெற்று உய்வடைந்தனர்.

அம்பாளின் அதிசயமான அருட் செயல்கள் பற்றிப் பல கர்ணபரம்பரையான கதைகள் காலங்கண்ட முதியோர்களினாலே கூறப்படுகின்றன.

கோயில் அமைவு:

யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 7 மைல் தூரத்தில் காரைநகர் வீதியில் சண்டிலிப்பாய் - சீரணிச் சந்தியிலிருந்து சுமார் 50 யார் தூரத்திலே அமைந்துள்ளது நாகம்மை கோயில்.

சீரணித் திருப்பதியிலும் நயினை நாகபூஷணியம்மை ஆலயம் போற் பாகங்களிலே ஐயனார் கோயில், காளி கோயில் முதலான ஆலயங்கள் விளங்குகின்றமை குறிப்பிடக்கூடியது.

இக்கால நிலை:

சண்டிருப்பாய் சீரணி நாகபூஷணி அம்மன் தேவஸ்தானத்தின் திருப்பணிகளை நடத்தும் பொருட்டு 10.10.1962இல் திருப்பணிச் சபையொன்று தாபிக்கப்பட்டது. இச்சபையின் நிருவாக சபையினர் கட்டுடை, சண்டிலிப்பாய், அளவெட்டி, சங்கானை முதலான பல இடங்களிலும் நிதி திரட்டிச் சிறந்தமுறையில் அம்பாளின் அருளினாலே மேலான தொண்டுகளைச் செய்து வருகின்றனர்.


முத்துமாரியம்மன், ஆவரம்பிட்டி, அராலி கிழக்கு

இலங்கையில் கண்ணகியம்மன் வழிபாடு

 

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top