கத்தரி வெருளி

- நவாலியூர் சோமசுந்தரப் புலவர் -

 

த்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று

காவல் புரிகின்ற சேவகா! - நன்று

காவல் புரிகின்ற சேவகா!



மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்

வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்

வேலை புரிபவன் வேறுயார்!



கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்

காவல் புரிகின்ற சேவகா! - என்றும்

காவல் புரிகின்ற சேவகா!



எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக

ஏவல் புரிபவன் வேறுயார்! - என்றும்

ஏவல் புரிபவன் வேறுயார்!



வட்டமான பெரும் பூசனிக்காய் போல

மஞ்சள் நிற உறு மாலைப்பார்! - தலையில்

மஞ்சள் நிற உறு மாலைப்பார்!



கட்டியிறக்கிய சட்டையைப் பாரங்கே

கைகளில் அம்பொடு வில்லைப்பார்! - இரு

கைகளில் அம்பொடு வில்லைப்பார்!



தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்

சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்

சோகிபோலே பெரும் பல்லைப்பார்!



கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய

கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா

கட்டை உடைவாளின் தேசுபார்!



பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்

பொல்லாத பார்வையுங் கண்டதோ? - உன்றன்

பொல்லாத பார்வையுங் கண்டதோ?



வாட்ட மில்லாப்ப்யிர் மேயவந்த பசு

வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி

வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே



கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு

கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்

கத்திக் கத்திக் கரைந்தோடுமே



நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு

நடுநடுங்கி மனம் வாடுமே - ஏங்கி

நடுநடுங்கி மனம் வாடுமே



ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்

ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல

ஏவற்காரன் நீயே யென்னினும்



ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே

ஆவதறிந்தன னுண்மையே - போலி

ஆவதறிந்தன னுண்மையே



தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்

துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்

துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்



சேரச் சேரப் போலி வேடக்காரனென்று

தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று

தெரிய வந்ததுன் வஞ்சகம்



சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்

தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்

தேசத்திலே பலர் உண்டுகாண்



அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா

அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்

அறிவு படைத்தனன் இன்றுநான்.




Home Page Kids Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top